உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் தாமதமாக கற்றுணர்ந்த விஷயங்கள் எவை?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் தாமதமாக கற்றுணர்ந்த விஷயங்கள் எவை?
- விடுமுறை எடுத்து HRயை பகைத்துக் கொண்டு நண்பர்களின் திருமணத்தில் பங்கு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நண்பர்களிடம் எடுத்து சொல்லி இருந்திருக்கலாம்.
- குறிப்பிட்ட வயதிற்கு பிறகு உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எப்படா நம்ம பணி தளத்தில் நம்ம நாற்காலியில் போய் உட்காருவோம் என்று தான் இருக்கும். அதிக விடுமுறை கூட போர் அடித்துவிடும்.
- கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு உங்களை அறியாமலே எடை கூடிக் கொண்டே செல்லும். முதலிலே கட்டுப்பாடுடன் உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
- எந்த உறவுக்கும் அடிமையாகி விடவே கூடாது. அதில் இருந்து வெளிவருவது ரொம்ப கடினம். அது அண்ணனோ தம்பியோ. அவர்களுக்கென்று ஒருவர் வந்து நம்மை விரட்டுவதற்குள் நாமே விலகிவிடுவது சிறந்தது.
- சமூதாயத்தில் முதியவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். முதியவர்களுடனான நல்லுறவு ஒரு நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசிப்பதற்கு சமம்.
- எந்த பிரச்சனைக்குமே தீர்வு அவரவர் தான். பிரச்சனையுடன் வருபவர்களின் தேவை அவர்கள் பேசுவதை யாராவது உண்மையில் கவனிக்க வேண்டும் என்பதே. அவர்கள் பேசுவதை கவனிப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் சிறந்த உதவி.
- யார் பேசுகையிலும் குறுக்கிட்டு பேசவே கூடாது. கவனித்தல் தான் ஆழமான சிந்தனைக்கு அடிக்கல்.
- உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதை ஒத்து கொள்கையில் தான் நல்ல புதுப்புது சிந்தனைகள் உதிக்கிறது மனதில்.
- குழந்தைகளை அசட்டை பண்ணவே கூடாது. பல சமயங்களில் வாழ்வின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான ரகசியங்களை எளிதாக நமக்கு கற்று தந்துவிடுவார்கள்.
- அஸ்திவாரங்கள் அழகாக தெரிவதே இல்லை…. அது அம்மாவோ, அப்பாவோ.
- பணத்தின் மதிப்பை அறிந்துவிட்டால் தலைக்கு மாட்ட ஒரு ரப்பர் பேண்டே போதும் என்றே தோன்றும். இன்னொரு க்ளிப் வாங்குவதும் அநாவசியம் என்றே தோன்றும்.
- எல்லா சூழ்நிலையிலும் அமைதி காப்பதே நல்ல மன முதிர்ச்சி. நிதானம் பல அவமானங்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.
- பொறுமையினால் எவரையும் சம்மதிக்கவைக்கலாம்.
- திருமணம் என்னும் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு ஐந்து வருட உழைப்பை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை.
- குடும்பத்தினருக்காக ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளவே கூடாது.
- பெரும்பாலான மக்களால் மகிழ்ச்சியாக வாழ முடியாததற்கு காரணமே அவர்களின் குற்ற மனசாட்சி தான்.
- இந்த உலகத்தின் தேவை மன்னிப்பும், மீண்டும் தன்னை குற்றவாளியாக பார்க்காத அன்பும் தான். அதனால் தான் தாயை கொண்டாடுகிறது இவ்வுலகம்.
- ஆண்களின் அத்தியாவசிய தேவை ஒரு பெண்ணிடமிருந்து கிடைக்கும் அரவணைப்புக் அவளின் வெட்பமும்.
- இன்றைய பெண்களின் அடிப்படை தேவை ஓய்வு.
- சமூகத்தில் கூனி குறுகி போய் இருப்பவர்கள் கடன் பட்டவர்கள், நெடு நாள் குழந்தை இல்லாதவர்கள், வேலை இல்லா பட்டாதாரிகள் மற்றும் வயதை கடந்து திருமணத்தை எதிர் நோக்கி இருப்போர். அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களும் இவர்கள் தான்.
- குழந்தைகள் எதிர் காலத்தில் நம்மை கவனித்துக் கொள்ள மாட்டார்களோ என்ற பயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெற்றோர் - குழந்தைகள் உறவில் நம்பிக்கையில் விரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
- கொண்டாட்டங்கள் அதிகரித்து மகிழ்ச்சி குறைந்துவிட்டது.
- உணவு வகைகள் அதிகரித்தது. அதற்கேற்ப வியாதியும் அதிகரித்தது.
- சோம்பேறித்தனமே இன்றைய இந்தியாவின் பெரும் கரும்புள்ளி. சுறுசுறுப்பு என்ற வார்த்தை இன்றைய தலைமுறையினருக்கு பாகற்காய் போன்றதே.
- உண்மையான நாகரீக வளர்ச்சி என்பது கோமணம் கட்டியிருப்பவனை கோட் சூட் அணி என்று சொல்வது இல்லை. அவனை அவனாகவே வாழவிடுவது. பிறரை மாற்றாமல் இருப்பது.
- முதியவர்களின் தேவை விசாரிப்பு.
- உலகின் தலை சிறந்த சொல், "கவலைப்படாதீங்க... எல்லாம் சரியாகிடும்" என்பதே.
- உண்மையில் நூற்றில் ஒருவர் கூட மகிழ்ச்சியாக இல்லை. மக்களுடன் அமர்ந்து, அவர்களின் வலது கையை எடுத்து நம் இடது கைமேல் வைத்து அவர் வலது கையை நம் வலது கையால் தடவிக் கொடுத்துக் கொண்டே கண்ணை பார்த்து உண்மையிலே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டால் நூறு பேரும் தாரை தாரையாக அழுதுவிடுவார்கள். அத்தனை கவலைகள் இங்கு மனிதர்களுக்கு.
- உலகின் மிக அழகான இரெண்டு அதிசயங்கள், ஒன்று குழந்தை இன்னொன்று காதல்.
- ஆணவம், பெருமை இந்த ரெண்டிற்கும் தீனி போடவே கூடாது. அது அழிவின் பாதைக்கு நேரே வழி நடத்தும்.
- பொய்கள் எப்பொழுதுமே மிகவும் அலங்கரிக்கப்பட்டதாக தான் இருக்கும்.
- எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.
- கொடுக்கும் போது இறைவனின் தன்மையை வெளிப்படுத்துகிறோம். கொடுத்தல் மிகச் சிறந்த பண்பு. கொடுப்பவனுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் இந்த ரகசியத்தை யாராலும் எளிதில் நம்ப முடியாது. அனுபவித்தால் ஒழிய.
- கடந்த காலத்தில் நான் என்ன பேசினேனோ அதை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வேண்டுமானால் சிறந்ததையே பேசுங்கள். சூழ்நிலைகள் எதிர்மாறாக இருந்தாலும் பாசிட்டிவான வார்த்தைகளையே பேசுங்கள்.
- வார்த்தைக்கு வல்லமை உண்டு. வார்த்தையினால் பலரை காயப்படுத்தவும் செய்யலாம். பலரின் காயத்திற்கு மருந்திடவும் செய்யலாம்.
- நாவை காத்தல் நம்மை பல பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்.
- அன்பால் எவரையும் ஆளலாம். கோபக்காரனுக்கு புத்தி மட்டு தான்.
- கோபம் வெறுப்பை தரும். வெறுப்பு பகையை உருவாக்கும். பகை பழிக்குப் பழி வாங்க நம்மை தூண்டும். அதனால் கோபம் வந்தால் அந்த நிமிடத்துடன் மறந்துவிட்டு செல்வது சிறந்தது. கோபமே பல மனிதர்களை குற்றவாளியாக நிற்க வைக்கிறது. ஆதலால் கோபப்பட மட்டும் தாமதிப்பது மிகவும் நல்லது.
- யாராக இருந்தாலும் உயிருடன் இருக்கையிலே மன்னித்துவிடலாம். யார் எப்பொழுது பூமியை விட்டு செல்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர் இறந்த பின் மன்னிக்காமல் இருக்கும் நமக்கு தான் வலிகள் அதிகம். 2019ல் வேலூர் பை பாஸில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் கற்றுக் கொண்ட வலி நிறைந்த பாடம் இது.
- என்னத்தை கொண்டு போகப் போற? நல்லா இருந்துட்டு போ என்று துரோகம் செய்தவரையும் புன்முறுவலுடன் வழிவிட்டனுப்புவது உண்மையில் மன அமைதியை தருகிறது.
- இருக்கும் வேலையை மட்டும் அவசரப்பட்டு விட்டுவிடவே கூடாது. இங்கு வேலைகிடைப்பது அத்தனை எளிதல்ல.
- சமையல் மிக சிறந்த பலதை கற்று தருகிறது என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. அது ஒரு வேலை இல்லை உண்மையில் அது ஒரு கலை. வேறெங்கும் கேட்க முடியாத பலவிதமான சத்தங்களை, வாசனைகளை, சுவைகளை சமையலறையில் நீங்கள் அனுபவிக்கலாம். கடுகு வெடிக்கும் சத்ததிற்கும் கறிவேப்பிலை வறுபடும் சத்ததிற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.
- அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டால் உலகம் மொத்தமும் அழகாக தான் தெரியும். வாழ்க்கை இத்தனை அழகானதா என்று காண விரும்புபவர்கள் இங்கு அன்பு செலுத்தலாம்.
இது வரையில் வாழ்க்கை கற்றுக் கொடுத்தது கை மண் அளவு கூட இல்லை.